கே.வி.குப்பம், பிப்.13: கே.வி.குப்பம் அருகே சத்துணவு அமைப்பாளரிடம் 5 சவரன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட காங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(38). துரைமூலை கிராமத்தில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாச்சனூர் கிராமத்தில் இருந்து மதியம் 12 மணியளவில் மொபட்டில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பறித்துக்கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து, செல்வம் தன் கணவர் துரைபாபுவிடம் கூறினார். இதையடுத்து, செல்வம் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.